Ongoing Novels

அரணாய் நீ வா - Epi 12

Image
  அரணாய் நீ வா!   அத்தியாயம் – 12 துப்பாக்கி சத்தம் கேட்டு பதறிப் போன பார்கவி பதட்டப்பட, “யாரும் இங்கே நிக்காதீங்க! எல்லாரும் உடனே கிளம்புங்க” என்றார் அங்கு நின்ற வனத்துறை அதிகாரி ஒருவர். பார்கவியின் நண்பர்கள் அனைவரும் வேகமாகச் சென்று வண்டியில் ஏற, அவளோ பதட்டம் மாறாமல் அப்படியே நின்றிருந்தாள். “அக்கா… வந்து வண்டியில ஏறு” என்று ஷாரதா அவளது தோள் தொட்டு கூறவும், “எனக்கு பயமா இருக்கு ஷாரதா. ஒருவேளை அவருக்கு எதுவும் பிரச்சனை ஆயிருக்குமோன்னு நினைச்சு மனசு கிடந்து அடிச்சுக்குது” என்றாள். “ஐயோ… அதெல்லாம் எதுவும் இருக்காதுக்கா. நீ எதுக்காக வீணா மனசை போட்டு குழப்பிக்குற?” என்று அவளை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றாள் ஷாரதா. “ஏம்மா… சீக்கிரமா கிளம்புங்கன்னு எவ்வளவு நேரமா கத்திட்டு இருக்கேன். நீங்க இங்கே இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்தும்மா. சொன்னா புரிஞ்சுகோங்க” என்று அந்த வனத்துறை அதிகாரி பொறுமை இழந்து பேசவும், இனியன் அவர்களிடம் சென்றான். “என்னாச்சு? ஏன் இன்னும் வண்டியில ஏறாம இருக்கீங்க?’ என்று அவன் கேட்க, “மாமாவை நினைச்சு அக்கா பயந்துட்டு இருக்கா இனியன்” என்றாள் ஷாரதா. “இனிய

அரணாய் நீ வா - Epi 9

 அரணாய் நீ வா!


அத்தியாயம் – 9

தன்னையே பார்த்துக் கொண்டு நிற்பவளின் முகத்தை செழியனும் பார்க்க, இருவரின் பார்வையும் ஒரே கோட்டில் தடைப்பட்டு நின்றது.

இன்னும் செழியனின் கரம் பார்கவியின் நெற்றியிலேயே பதிந்திருக்க, இருவரின் யோசனையையும் கலைக்கும் விதமாக வந்தது, “அண்ணா!” என்கிற இனியனின் குரல்.

அதைக் கேட்டதும் பார்கவி சட்டென பதறி விலக, செழியனோ, “இனியன் தானே கூப்பிட்டான். எதுக்காக இப்படி பதறுற?” என்று அவளிடம் கேட்டான்.

அவள் ஏதோ சொல்ல வாயெடுக்கையில் இனியன் அங்கே வந்துவிட, அவனுக்குப் பின்னால் ஷாரதாவும் சேர்ந்து வந்தாள்.

இருவரையும் பார்த்தபடி வராந்தாவில் போடப்பட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்த அரண் செழியன், தனது ஷூவை கழற்றியபடி, “எல்லாரும் ஒண்ணா தான் இருக்கீங்க போல!” என்று கேட்டான்.

இனியனோ, “அது… அண்ணா நான் தான் இவங்க இரண்டு பேரையும் இங்கே வரச் சொன்னேன்” என்று கூறவும்,

“சும்மா சொல்லக் கூடாது இனியன். நீ ப்ளான் எல்லாம் நல்லா தான் போடுற!” என்றான் அவன், இருக்கையில் இருந்து எழுந்தபடி.

“சரி சரி… உள்ளே வாங்க!” என்றபடி செழியன் வீட்டிற்குள் சென்றுவிட, அவனது முதுகையே வெறித்துப் பார்த்த பார்கவி, 

“உங்க அண்ணன் எப்பவும் இப்படி தான் விறைப்பா இருப்பாரா?” என்று இனியனிடம் கேட்டாள்.

“அப்படி எல்லாம் இல்ல அண்ணி. போலீஸ் யூனிஃபார்ம் போட்டிருக்கும் போது மட்டும் கொஞ்சம் விறைப்பான ஆஃபிசர் மாதிரி நடந்துக்குவாரு. மத்தபடி சில் தான்!” என்றான் அவன்.

அதன் பிறகு மற்றவர்களும் வீட்டிற்குள் செல்ல, செழியன் தனது அறைக்குச் சென்று முகம், கை, கால் கழுவி விட்டு உடைமாற்றி வந்தான்.

ஹாலுக்கு வந்தவன் இனியனிடம், “அவங்க இரண்டு பேருக்கும் சாப்பிட ஏதாவது வாங்கிக் கொடுத்தியா?” என்று கேட்க, அவன் இல்லை என்று தலையசைத்தான்.

“நல்ல ஆளுடா நீ!” என்றவன், சமையலறைக்குச் சென்று சிறிது நேரம் கழித்து மீண்டும் ஹாலுக்கு வந்தான்.

“ப்ளாக் டீ ஓகேவா?” என்று அவன் பொதுவாகக் கேட்கவும்,

“இல்லை வேண்டாம்!” என்று பார்கவி சொல்ல,

“டபுள் ஓகே மாமா!” என்றாள் ஷாரதா.

அவளது பதிலைக் கேட்டதும் சரியென்று தலையசைத்தபடி செழியன் மீண்டும் சமையலறைக்குள் சென்றுவிட, பார்கவி தான் தன் தங்கையிடம் கடுகடுத்தாள்.

“ஏன்டி! எங்கே போனாலும் சோறு சோறுன்னு அலையுற? இப்போ இந்த ப்ளாக் டீ குடிக்கறது தான் உனக்கு ரொம்ப முக்கியமா?” என்று கேட்க,

“நான் டீக்கு ஓகேன்னு சொன்னது எனக்காக இல்ல… உனக்காகத் தான்!” என்றாள் ஷாரதா.

அதைக் கேட்டதும், “எனக்காகவா?” என்று அவள் முழிக்க,

“ஆமா! மாமா ப்ளாக் டீ போடுறப்போ நீயும் சேர்ந்து அவருக்கு ஹெல்ப் பண்ணப் போற சாக்குல அவர்கிட்ட மனசுவிட்டு பேசலாம்ல. அப்போ தானே உங்களுக்குள்ள ஒரு புரிதல் வரும்!” என்றாள்.

“அடிப்பாவி! உன்னை என்னமோ நினைச்சேன். ஆனா, நீ பண்ணுற வேலை எல்லாம் இருக்கே!” என்ற பார்கவியிடம்,

“இந்த வேலையெல்லாம் நான் ஏதோ உனக்காக தான் பண்ணுறேன்னு தப்பா நினைச்சுக்காதம்மா! இது முழுக்க முழுக்க என் சுயநலத்துக்காக தான் பண்ணுறேன்” என்று ஷாரதா கூற, பார்கவியோ புரியாமல் புருவம் சுருக்கினாள்.

“அது… வேற ஒண்ணுமில்ல… ஒருவேளை செழியன் மாமாவுக்கும் உனக்கும் ஒத்து போகாமப் போய் என் கல்யாணத்துக்கு ஆப்பு வந்துருச்சுன்னா” என்றபடி தனது நெஞ்சில் கை வைத்து பெருமூச்சு விட்டவள்,

“ஐய்யயோ… அப்படி ஒரு சம்பவத்தை என்னால நினைச்சு கூட பார்க்க முடியல. அதனால இப்போ நீ என்ன பண்ணுற! கிச்சன்ல டீ போட்டுட்டு இருக்கற செழியன் மாமாவுக்குப் போய் உதவி செஞ்சு, அவர் கூட மிங்கில் ஆகுற வழியைப் பாரு!” என்றபடி இருக்கையில் இருந்து எழுந்தாள்.

அதன் பிறகு இனியனிடம் திரும்பியவள், “இனியன் வா அப்படியே ஒரு வாக் போயிட்டு வரலாம்!” என்று கூற, எழுந்து அவளருகே வந்தவன்,

“அப்படியே போனா பின் வாசல் தான் வரும் பேபி!” என்றபடி திரும்பி தலைவாசலை அவளுக்கு சுட்டிக் காட்டியவன்,

“இப்படி போனா தான் மெயின் ரோடு வரும். அங்க வேணா நாம வாக்கிங் போகலாம்!” என்று கூறி, ஏதோ பெரிய ஜோக்கை சொன்னது போல சிரித்தான்.

முப்பதிரண்டு பற்கள் தெரிய சிரித்தவன் அப்படியே திரும்பி ஷாரதாவைப் பார்க்க, அவளோ கருவிழிகள் பிதுங்கி வெளியே வந்துவிடும் அளவிற்கு அவனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிரிப்பில் வளைந்த இனியனின் உதடுகள் அப்படியே நேராகி அந்த சிரிப்பு காணாமல் போகவும், அவனது காதோரம் நெருங்கிச் சென்றவள்,

“அடுத்த முறை இந்த மாதிரி ஏதாவது கேவலமான ஜோக் சொல்லி என்னை கடுப்பேத்துனேன்னு வையி! களக்காடு புலிகள் காப்பகத்துல இருக்குற புலிக்கு உன்னை இரையா கொடுத்துட்டு நான் கிளம்பி மதுரைக்குப் போய்ட்டே இருப்பேன்!” என்று சீரியசான குரலில் கூறவும்,

“ஐயோ… வயலென்ஸ் எல்லாம் எதுக்கு பேபி! இனிமே ட்ரிப் முடியுற வரைக்கும் நான் வாயே திறக்க மாட்டேன்… சரியா!” என்றவன், “வா போகலாம்” என்றபடி அவளது கரம் பற்றி அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.

அவர்கள் சென்ற பிறகு ஹாலில் தனியாக இருந்த பார்கவிக்குத் தான் என்ன செய்வதென்று தெரியவில்லை.

ஒரு நிமிடம் அப்படியே மௌனமாக அமர்ந்திருந்தவள் ஏதோ ஒரு உந்துதலில் எழுந்து மெதுவாக நடந்து சமையலறை நோக்கிச் சென்றாள்.

உள்ளே செழியன் டீ போடுவதில் முனைப்பாக இருக்க, அவனிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவது என்று புரியாமல் முழித்துக் கொண்டு நின்றாள் அவள்.

தான் அணிந்திருந்த துப்பட்டாவின் முனையை திருகியபடி பார்கவி நின்றிருக்க, “ஏன் அங்கேயே நிக்குற? உள்ளே வர வேண்டியது தானே!” என்றான் செழியன்.

அவன் அவ்வாறு சொல்லவும் திடுக்கிட்டு நிமிர்ந்தவள், ‘எப்படி திரும்பி பார்க்காமலே நாம இங்கே வந்தததை கண்டுபிடிச்சாரு? ஒருவேளை போலீஸ்காரங்களுக்கு முதுகுலேயும் கண் இருக்குமா என்ன?’ என்று நினைத்தவள், யோசனையுடனே சமையலறைக்குள் சென்றாள்.

அடுப்பில் தளதளவெனக் கொதித்துக் கொண்டிருந்த நீரில் தேவையான அளவு டீ தூளை எடுத்துப் போட்டவன், அடுப்பை அணைத்துவிட்டு தேநீர் பாத்திரத்தை மூடி வைத்தான்.

இப்போது தன்னருகே நின்றிருந்தவளிடம் திரும்பிய செழியன், ஹாலில் பார்வை பதித்தபடி, “அவங்க இரண்டு பேரையும் எங்கே காணோம்?” என்று கேட்க,

“வாக்கிங் போயிட்டு வர்றோம்னு சொல்லிட்டு போனாங்க!” என்றாள் அவள்.

செழியனோ, “நினைச்சேன்! அவன் ஓவர் உற்சாகத்துல சுத்தும் போதே இப்படி ஏதாவது செய்வான்னு நினைச்சேன்” என்றபடி மீண்டும் டீ இருந்த பாத்திரத்தை திறந்து பார்த்தான்.

சுடுநீரில் தேயிலை சாறு நன்றாக இறங்கி, நீர் கருமை நிறம் கொண்டிருப்பதைக் கண்டதும் வேறொரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டவன், தேநீரை வடிகட்டி அதில் ஊற்றினான்.

அதைக் கண்டதும், “நான் வேணா உங்களுக்கு ஹெல்ப் பண்ணட்டுமா?” என்றாள் பார்கவி.

உடனேயே, “தேவையில்ல… நானே பார்த்துக்குறேன்!” என்று அவனிடமிருந்து பதில் வந்தது.

“பரவாயில்ல நான் பண்ணுறேன். என்கிட்ட கொடுங்க!” என்று அவள் அவனை நெருங்கிச் செல்லவும்,

“அதான் தேவையில்லன்னு சொன்னேன்ல” என்றான் அவன் அழுத்தமான குரலில்.

அதைக் கேட்டவளுக்கோ விழிகளில் முணுக்கென நீர் கோர்த்து விட்டது.

சட்டென திரும்பி நின்றவள், அங்கிருந்து கடகடவென நடந்து வெளியே சென்று விட்டாள்.

அவளையே பார்த்து நின்ற செழியனோ பின்னந் தலையை கையால் தேய்த்து விட்டபடி, தன்னையே திட்டிக் கொண்டான்.

பின்னர் ஒரு கண்ணாடி கப்பில் தேனீர் ஊற்றியவன், அதை எடுத்துக் கொண்டு பார்கவியைத் தேடி ஹாலுக்குச் சென்றான்.

அவளோ அங்கிருந்த சோஃபாவில் முகத்தை தூக்கி வைத்தபடி அமர்ந்திருக்க, அவளருகே சென்று அமர்ந்தவன் கப்பை அவளிடம் நீட்டியபடி, “பாரூ… டீ குடி!” என்றான்.

அவளோ எங்கோ பார்த்தபடி, “வேண்டாம்” என்று கோபத்துடன் பதில் கூறவும், பெருமூச்சு விட்டவன்,

“சாரி! ஏதோ டென்ஷன்ல அப்படி பேசிட்டேன். இந்தா டீ எடுத்துக்கோ” என்றான்.

இப்போதும் அவனது முகம் நோக்காமல், “அதான் வேண்டாம்னு சொல்றேன்ல!” என்றவள்,

“பேசுறதையும் பேசிட்டு சாரியாம் சாரி… பெரிய காஞ்சிபுரம் சாரி!” என்று சற்று சத்தமாகவே முணுமுணுக்க, அதைக் கண்டு செழியனுக்கு சிரிப்பு தான் வந்தது.

சத்தமாக சிரித்தவனை திரும்பிப் பார்த்து முறைத்தபடி, “என்னவாம்?” என்று அவனிடம் கேட்டாள்.

“இல்ல… கேவப்படும் போது நீ செம்ம க்யூட்டா இருக்க தெரியுமா?” என்று அவன் கூறவும், அதைக் கேட்ட பார்கவிக்கு உள்ளே பரவசமாகத் தான் இருந்தது.

ஆனால், அதை அவனிடம் காட்டிக் கொள்ளாமல், “ஆனா, நீங்க கோவப்பட்டது கரடி மாதிரி கேவலமா இருந்தது தெரியுமா!” என்றபடி மீண்டும் முகத்தை அவனிடமிருந்து திருப்பிக் கொண்டாள்.

“ம்ம்ம்… கரடிக்கு வாக்கப்பட்டா கரடியா மாறித் தானே ஆகணும்! அதனால நீ என்னை கரடின்னு சொன்னதை நான் ஏத்துக்குறேன்” என்று செழியன் கூற,

“வாட்?” என்று திரும்பியவள்,

“என்ன சொன்னீங்க? நான் கரடியா?” என்று பல்லை கடித்தபடி அவனிடம் கேட்டாள்.

“ஆமா! பின்ன இல்லைன்னு சொல்லுறியா?” என்று செழியனும் விடாப்பிடியாக பதில் கேள்வி கேட்க,

“உங்களை…” என்றபடி தனது கையைத் தூக்கியவள், அவனை அடிப்பதற்காக நெருங்கவும், அவன் தப்பிப்பதற்காக பின்னால் சாய்ந்து கொண்டான்.

பார்கவியோ முன்னால் நகர்ந்து தடுமாறி செழியன் மீதே சாய, அவன் அனிச்சை செயலாக அவளது முதுகைப் பற்றி வளைத்து அவளை தனது மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

அவளுக்கு அவனது தொடுகை இன்ப அவஸ்தையாக இருக்க, அவனிடமிருந்து விலகத் தோன்றாமல் அப்படியே அவனது முகம் நோக்கியபடி அமர்ந்திருந்தாள்.

செழியனும் கூட, அவளை தன்னிடமிருந்து விலக்கத் தோன்றாமல், பார்கவியின் நெருக்கத்தை ரசித்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.


சில நொடிகள் மௌனத்திலேயே கரைய, “பாரூ…” என்று மென்மையான குரலில் அவளது பெயர் சொல்லி அவன் அழைக்கவும்,

“ம்ம்ம்…” என்று மென்மையாகவே பதிலளித்தாள் அவள்.

“உனக்கு இந்த வீடு பிடிச்சிருக்கா?” என்று செழியன் கேட்க, புரியாமல் ஒரு கணம் விழித்தவள், பின்னர் அவன் கேட்டதன் அர்த்தம் உணர்ந்து உள்ளுக்குள் மகிழ்ந்தபடி மௌனமாகவே இருந்தாள்.

“பதில் சொல்லு! உனக்கு இந்த வீடு பிடிச்சிருக்கா இல்லையா?” என்று அவன் மீண்டும் கேட்க,

“ம்ம்ம்… பிடிச்சிருக்கு!” என்றாள்  குரலில் மென்மை மாறாமல்.

அதைக் கேட்டதும் செழியனின் இதழோரம் புன்னகை பூத்தது.

“ஏன் நீ இங்கே டூர் வந்த விஷயத்தை என்கிட்ட முதல்லேயே சொல்லலை?” என்று அவன் புருவம் உயர்த்திக் கேட்கவும்,

“திருநெல்வேலிக்கு டூர் போறோம்னு தான் தெரியும். ஆனா, நீங்க வேலை செய்யுற இடத்துக்கு தான் வர்றோம்னு எனக்குத் தெரியாது!” என்றாள் அவள்.


இன்னும் அவன் மீது சாய்ந்தபடியே தான் அவனது கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தாள்.

அவனோ விடாமல், “ஒருவேளை தெரிஞ்சிருந்தா என்கிட்ட முன்னாடியே சொல்லி இருப்பியா?” என்று கேட்க,

“அது…” என்றபடி யோசித்தவள், “தெரியல!” என்றாள்.

அவளது சூடான மூச்சுக்காற்று செழியனின் முகத்தில் வந்து மோதி அவனை இம்சித்துக் கொண்டிருந்த வேளையில்,

“வாரே வா! என்ன ஒரு கண் கொள்ளா காட்சி!” என்றபடி ஷாரதாவுடன் சேர்ந்து அங்கே வந்து நின்றான் இனியன்.

அவனது குரல் கேட்டதும் பார்கவி சட்டென செழியனிடமிருந்து விலகிக் கொள்ள,

“இப்போ தெரியுதா உண்மையான கரடி யாருன்னு!” என்று அவளுக்கு மட்டுமே கேட்கும்படியான குரலில் செழியன் கூறவும், அவளோ சிரிப்பை அடக்க அரும்பாடு பட்டாள்.

“அக்கா!” என்று சிரித்தபடியே ஷாரதா வந்து பார்கவியின் அருகில் அமரவும், தனது பின்னந்தலையை கோதிக் கொண்ட செழியன், “நான் போய் டீ எடுத்துட்டு வர்றேன்!” என்றபடி அங்கிருந்து கழன்று கொண்டான்.

இனியனும் அவன் பின்னாலேயே சென்றுவிட, பார்கவியைப் பார்த்த ஷாரதா, “சாய்ந்து சாய்ந்து… நீ பார்க்கும் போது… அடடா! ஹே” என்று அவளை கேலி செய்து பாடினாள்.

அதைக் கேட்டதும் தன் தங்கையை முறைத்த பார்கவி, “என்னடி? பாட்டெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு!” என்றாள்.

“யாரோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் டீ கேட்டதுக்கு கோபப்பட்டதா ஞாபகம்!” என்ற ஷாரதாவிடம்,

“அதுக்கு இப்போ என்னவாம்?” என்று கேட்டாள் அவள்.

“ஒண்ணுமில்லம்மா… எப்படியோ உனக்கு நல்லது நடந்தா சரிதான்” என்றாள் ஷாரதா.

சமையலறைக்குச் சென்ற இனியன், “பரவாயில்லண்ணா… நானும்… நீ முன்னாடி பேசினதை வச்சு, உன்னை ஒரு சாமியார் ரேஞ்சுக்கு கற்பனை பண்ணியிருந்தேன். ஆனா, உனக்குள்ளேயும் ஒரு காதல் மன்னன் ஔிஞ்சுட்டு இருந்தது இப்போ தானே தெரியுது!” என்று கூற,

“டேய்! என்றபடி திரும்பிய செழியன்,

“ஏன்! எனக்கெல்லாம் காதல் வரக்கூடாதா? நீ மட்டும் தான் காதலிக்கணும்னு சட்டத்துல ஏதும் எழுதி இருக்கா என்ன?” என்றவன் இரண்டு கோப்பைகளில் தேநீரை ஊற்றி அவனிடம் கொடுத்தான்.

அதன் பிறகு, தேநீர் கோப்பைகளுடன் இருவரும் ஹாலுக்கு வந்தனர்.

அப்பொழுது தனது ஃபோனில் பேசிக் கொண்டிருந்த பார்கவி, “ம்ம்ம்… சரி ரம்யா. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுறோம்” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

ஷாரதாவும் இனியனும் தேநீர் அருந்த, “ரம்யா கால் பண்ணுனா. அங்கே கேம்ப் ஃபையர் ரெடி பண்ணி இருக்காங்களாம். உடனே கிளம்பி வர சொல்றாங்க” என்றாள்.

அதைக் கேட்ட செழியன், “ஓகே… அப்படின்னா நீங்க கிளம்புங்க” என்றபடி,

“இனியன்! நீ அவங்க கூட துணைக்கு போ” என்றான்.

“இல்ல… அது… நம்ம நாலு பேரையும் சேர்த்து தான் இன்வைட் பண்ணியிருக்காங்க!” என்றாள் பார்கவி.

செழியன், “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அதனால நீங்க மூணு பேரும் போயிட்டு வாங்க” என்றான்.

அதைக் கேட்டதுமே அவளது முகம் வாடிப் போய் விட்டது.

“உனக்கு வருஷம் முழுக்க வேலை தான். எப்போ நீ ஃப்ரீயா இருந்திருக்க. சும்மா வாண்ணா… நீயும் வந்தா தான் நல்லா இருக்கும்” என்று இனியன் கூற, அவனோ பார்கவியின் முகம் நோக்கினான்.

பின்னர் என்ன நினைத்தானோ, “சரி வர்றேன்!” என்று சொல்ல, அனைவர் முகத்திலும் புன்னகை.

ஐந்து நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பியதும், “இனியன்! ஒரு ஆட்டோ பிடி. பார்கவியும் ஷாரதாவும் ஆட்டோவில் வரட்டும். நம்ம இரண்டு பேரும் பைக்கில் போயிடலாம்” என்றான்.

இனியனும் சென்று ஆட்டோ பிடித்து வர, “அண்ணா… நானும் ஷாருவும் ஆட்டோவுல போறோம். நீ அண்ணியைக் கூட்டிட்டு வந்துரு!” என்றபடி அவனது பதிலுக்குக் கூட காத்திருக்காமல் ஷாரதாவுடன் ஆட்டோவில் ஏறிச் சென்று விட்டான்.

“டேய்… டேய்…” என்று செழியன் கத்தியது காற்றோடு கரைந்து போனது.

திரும்பி பார்கவியைப் பார்த்தவன், “வா!” என்று அழைக்க, அவளும் வந்து செழியனுடன் பைக்கில் ஏறி அமர்ந்தாள்.

“எங்கே போகணும்?” என்று அவன் கேட்க, அவளும் தனது அலைபேசியில் லொக்கேஷன் பார்த்து அவனிடம் கூறினாள்.

பின்னர் இருவரும் செழியனின் புல்லட்டில் அவர்கள் செல்ல வேண்டிய இடம் நோக்கிப் பயணப்பட்டனர்.

சாலையில் மேடு, பள்ளம் இருந்த போதிலும், பார்கவியை அலுங்காமல் குலுங்காமல் பத்திரமாகவே அழைத்துச் சென்றான் செழியன்.

தெப்பக்குளம் தாண்டி தென்னந்தோப்பு, மாந்தோப்புகள் வழியாக அவர்கள் பயணம் செய்து கொண்டிருக்க, இரவாகி இருந்ததால் சாலையில் மிகக் குறைந்த அளவிலான வெளிச்சமே இருந்தது.

பின்னால் அமர்ந்திருந்தவள், “என்ன இவ்வளவு இருட்டா இருக்கு?” என்று கேட்க,

“ஏன் பாரூ! இருட்டுன்னா உனக்கு பயமா?” என்று கேட்டான் அவன்.

“அப்படியில்ல… ஆனா, லைட்டா பயம் தான்” என்றவளை சிரித்தபடியே திரும்பிப் பார்த்தவன்,

“பயப்படாத! ஊருக்கே பாதுகாப்பு கொடுக்கிறவன், உன்னை பத்திரமா பார்த்துக்க மாட்டேனா!” என்று கூறவும், அதைக் கேட்ட பார்கவிக்கு தேகம் சிலிர்த்தது.

அடுத்ததாக கரடு முரடான சிறிய பாலம் ஒன்று வர, மழை பெய்திருந்ததால் அதில் வெள்ளம் தேங்கி நின்றது.

“பாரூ… என் தோளை பிடிச்சுக்கோ!” என்று செழியன் சொல்லவும், முதலில் சற்று தயங்கி, பின்னர் அவன் சொன்னது போலவே அவனது தோளை பற்றிக் கொண்டாள் பார்கவி.

மெதுவாக வண்டியை ஓட்டி பாலத்தைக் கடந்தவன், ஒரு தோப்பிற்கு நடுவே தனியாக இருந்த ஒரு வீட்டை யதார்த்தமாக நோக்கினான்.

அந்த வீட்டில் இருந்து யாரோ அவசர அவசரமாக வெளியறுவது அவனுக்குத் தெரியவும், வண்டியின் வேகத்தை சற்று குறைத்து, பார்வையைக் கூர்மைப்படுத்தி அந்த நபரை பார்த்தான்.

தெரு விளக்கின் வெளிச்சத்தில் தெரிந்த அந்த உருவத்தைக் கண்டவனின் புருவங்கள் சந்தேகத்தில் சுருங்கின.

அங்கு, கொலை செய்யப்பட்ட செல்வனின் மனைவி துர்கா அவசர அவசரமாக ஒரு ஆட்டோவில் ஏறிக் கொண்டிருந்தாள்.

உடனே தனது புல்லட்டை நிறுத்தியவன், ‘இவங்க ஏன் இந்த நேரத்துல, அதுவும் தனியா அந்தத் தோப்பு வீட்டுக்கு வந்துட்டுப் போறாங்க?' என்று நினைத்தவன், அவள் ஏறிய ஆட்டோவின் பதிவெண்ணை தனது அலைபேசியில் சேமித்துக் கொண்டான்.

“என்னாச்சு! ஏன் வண்டியை நிறுத்திட்டீங்க?” என்று பார்கவி புரியாமல் கேட்க,

“ம்ம்ம்… ஒண்ணுமில்ல பாரூ. இதோ இப்போ போயிடலாம்!” என்றபடி வண்டியை தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செலுத்தினான் அரண் செழியன்.

அரணாய் வருவான்…

Comments

Post a Comment

Popular posts

அரணாய் நீ வா - Epi 12

அரணாய் நீ வா - Epi 1

அரணாய் நீ வா - Epi 11